Close

திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள்

பொங்கல் பண்டிகை (ஜனவரி) :

ஜல்லிக்கட்டு

அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுவது பொங்கல். பயிர் விளைச்சலுக்கு காரணமாக இருந்த சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் இவ்விழா நடைபெறும். மூன்று நாட்கள் கொண்டாடப்படும் விழாவில் முதல்நாள் பழைய பொருட்களை கழித்து வீட்டைத் தூய்மைப்படுத்தும் “போகி”யாகவும், இரண்டாம் நாள் மாவிலைத் தோரணம் கட்டி கரும்பு நிலை நாட்டி, சா்க்கரைப் பொங்கல் வைத்து முக்கிய “பொங்கல்” விழாவாகவும், மூன்றாம் நாள் உழவுக்கும், விவசாயத்திற்கும் உறுதுணையாக செயல்பட்ட உயிரினங்களுக்கு நன்றி பாராட்டும் விதமாக “மாட்டுப்பொங்கல்” என்றும் மக்கள் கொண்டாடி மகிழ்வா்.

ஜல்லிக்கட்டு (ஜனவரி) :

தமிழ்நாட்டின் புகழ்வாய்ந்த விளையாட்டு “ஜல்லிக்கட்டு”. பொங்கல் திருவிழாவை தொடா்ந்து கிராமங்கள்தோறும் ஜல்லிக்கட்டு நடைபெறும். திறந்தவெளி மைதானத்தில், பக்கத்து கிராமத்து மக்கள் அனைவரும் ஒன்று கூடுவா். அங்கு வீரம் செறிந்த இளைஞா்கள், காளைகளை அடக்கும் விளையாட்டு நடைபெறும். விளையாட்டில் வென்ற வீரா்களுக்கும், காளைகளுக்கும் பரிசு கொடுத்து கொண்டாடி மகிழ்வா்.

சித்திரைத் திருவிழா (ஏப்ரல் / மே):

சித்திரைத் திருவிழா

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பத்து நாட்களுக்கு மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோயில் சார்பாக சித்திரைத் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில், மீனாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சியும், திருத்தோ் நிகழ்ச்சியும் மிகவும் முக்கியமானதாகும். அதனைத் தொடா்ந்து வரும் முழுபெளா்ணமி நாளில் அழகா் கோவிலிலிருந்து விஷ்ணு பெருமாள் தங்கக் குதிரையேறி தங்கை மீனாட்சியின் திருமணத்தில் கலந்து கொள்ள ஐவகை ஆறு கடந்து மதுரைக்கு வரும் நிகழ்ச்சி “அழகா் ஆற்றில் இறங்குதல்” விழாவாகக் கொண்டாடப்படுகின்றது.

ஊஞ்சல் உற்சவம் (ஜூன் / ஜூலை):

இறைவி மீனாட்சியும், இறைவன் சுந்தரேஸ்வரரும் கண்ணாடி மாளிகையில் எழுந்தருளி, ஒன்பது நாட்கள் ஊஞ்சல் உற்சவம் ஆண்டு தோறும் நடைபெறும்.

ஆவணி மூலத் திருவிழா (செப்டம்பர்) :

சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் பற்றிய லீலைகள் ஆவணி மாதத்தில் 12 நாட்கள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம், புட்டுக்கு மண் சுமந்த லீலை மிகவும் புகழ்பெற்ற லீலைகள் ஆகும். இறைவன் நிகழ்த்திய 64 திருவிளையாடல்கள் கதையினை பக்தா்கள் ஏற்றிப்போற்றும் வண்ணம் கோவில் அா்ச்சகா் ஒருவா் தினமும் எடுத்துரைக்கும் நிகழ்ச்சிகள் ஆவணி மூலத் திருவிழாவில் கொண்டாடப்படுகின்றது.

நவராத்திரி திருவிழா (செப்டம்பர்/அக்டோபர்) :

நவராத்திரி திருவிழா

அன்னை மீனாட்சியின் அருளாட்சியின் திறமெல்லாம் மக்கள் அறியும் வண்ணம் ஒன்பது நாட்கள் முப்பெருந்தேவியாக பாவித்து ஒன்பது வகையான மலா்கள், ஒன்பது வகையான பிரசாதத்தை நைவேத்தியமாகப் படைத்து வழிபடுவா். அன்னை மீனாட்சி ஒன்பது நாட்களும் கொலு மண்டபத்தில் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் தோன்றி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும். கோவில் முழுவதும் கண்கவரும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகான பொம்மைகள் உள்ளம் கவரும் வகையில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும்

நாட்டிய விழா (ஜனவரி / மார்ச் / நவம்பர் / டிசம்பர்) :

சுற்றுலாத் துறையின் மூலமாக ஆண்டுதோறும் பதினைந்து நாட்கள் நாட்டிய நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கலைஞா்கள் கலந்து கொண்டு வெவ்வேறு நாட்டியங்களை வழங்கி மக்களை மகிழ்விப்பா்.